ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் எதிர்க்கட்சிகளைப் பிளவுபடுத்தும் செயற்பாட்டைச் சிறந்த முறையில் மேற்கொண்டு வெற்றி பெற்றுள்ளார் என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் நேற்று (20.08.2023) நடைபெற்ற சுதந்திர மக்கள் சபையின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, நெருக்கடியான சூழலில் எவரும் அரசாங்கத்தைப் பொறுப்பேற்கவில்லை என்று குறிப்பிடுவது தவறு.
அத்துடன், ராஜபக்சர்களின் பாதுகாவலனாகவே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.
எதிர்கால அரசியல் பாதிக்கப்படும்
அரசாங்கத்தை பொறுப்பேற்கத் தயார் என சுதந்திர மக்கள் சபையின் தலைவர் டலஸ் அழகபெரும அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் குறிப்பிட்டார். டலஸ் அழகபெருமவை பிரதமராக்க வேண்டாம் என பசில் ராஜபக்ச கூறினார்.
ராஜபக்சர்களுக்கு எதிரானவர்களைப் பிரதமராக்கினால் ராஜபக்சர்களின் எதிர்கால அரசியல் பாதிக்கப்படும் என்பதை நன்கறிந்து 134 உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தார்கள்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் எதிர்க்கட்சிகளைப் பிளவுபடுத்தும் செயற்பாட்டைச் சிறந்த முறையில் மேற்கொண்டு வெற்றி கொண்டுள்ளார்.
தற்போதைய நிலையில் பலமான எதிர்க்கட்சி ஒன்று இல்லாத காரணத்தால் அரசாங்கம் தன் விருப்பத்துக்கு அமையச் செயற்படுகிறது.
தேர்தல் ஒன்று இடம்பெறும் வரை சகல எதிர்க்கட்சிகளும் நாட்டுக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம்.
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்துப் பரந்துபட்ட அரசியல் கூட்டணியை வெகு விரைவில் ஸ்தாபிப்போம் என தெரிவித்துள்ளார்.