கிழக்கு மாகாணத்தின் கடுமையான வறட்சியுடனான காலநிலை நிலவுவதுடன், தற்போது வெளிநாட்டுப் பறவை இனங்கள் சஞ்சரிப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி, சம்மாந்துறை, நிந்தவூர், மகாஓயா ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் மட்டக்களப்பு மாவட்டம் - வவுணதீவு, கொக்கடிச்சோலை, வெல்லாவெளி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள நீர் நிலைகளை நாடி இந்த வெளிநாட்டுப் பறவை இனங்கள் வருகை தருகின்றன.
மேலும் இம்மாதம் ஏற்பட்டுள்ள வறட்சி நிலையிலும் பல நாட்டுப் பறவைகளும் இங்கு வந்து தங்குவதுடன், சுமார் 23க்கும் மேற்பட்ட பறவைகள் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் கூடு கட்ட ஆரம்பிப்பதாகக் கூறப்படுகின்றது.
பறந்து செல்லும் வல்லமை
மேற்குறித்த பறவைகள் 3000 மைல் தூரம் பறந்து செல்லும் வல்லமை கொண்டவை என தெரிவிக்கப்படுகின்றது.
அவுஸ்திரேலியா , சுவிட்சர்லாந்து, ரஷ்யா, ஜேர்மனி, பிலிப்பைன்ஸ், சைபிரியா ஆகிய நாடுகளிலிருந்து பறவைகள் இங்கு வருகின்றன.
இவ்வாறு வரும் பறவைகள் ஏப்ரல் மே, ஜூன், ஜூலை மாதம் வரை தங்கியிருந்து குஞ்சு பொரித்து பிறகு அவற்றுடன் பறந்து செல்கின்றன.
இதில் செங்கால் நாரை, பூநாரை, கூழைக்கடா, கடல்காகம், கடல்ஆலா, கூழைக்கடா, பாம்புத்தாரா, சாம்பல்நாரை, வெட்டிவாயன், கரன்டிவாயன், வெள்ளை அரிவாள் மூக்கன், நாரை இனங்கள் அன்னப் பறவை உள்ளிட்ட கொக்கு இனங்கள் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.