கம்பளை – ஜயமாலபுர பகுதியில் கடத்திச் செல்லப்பட்ட இலங்கை போக்குவரத்து சபையில் பணிப்புரியும் சாரதி சந்தேகநபர்களிடம் இருந்து தப்பி, கம்பளை பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளார்.
அத்தோடு அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, கம்பளை போதனா வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மாவெல பகுதியிலிருந்து கண்டி நோக்கி சென்ற பேருந்தில் பயணித்த குறித்த நபர், இனந்தெரியாதோரால் நேற்று தாக்கப்பட்டு, கம்பளை – ஜயமாலபுர பகுதியில் வைத்து வேன் ஒன்றின் மூலம் கடத்தப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், குறித்த வேனில் இருந்தவர்கள் தம்மிடம் வாள் ஒன்று தொடர்பாக விசாரணை செய்ததாக கடத்தப்பட்டவர்களிடம் இருந்து தப்பியவர் காவல்துறையினரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
இதன் பின்னர், குறித்த நபர் கொழும்பு ஒருகொடவத்த பகுதியில் வேனில் இருந்து தப்பி நேற்றிரவு கம்பளை காவல்துறை நிலையத்திற்கு வருகைத்தந்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான கம்பளை பேருந்துசாலையில் பணியாற்றும் கொத்மலை கடதொர பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.