இலங்கை மின்சார சபையிடம் மின் கட்டணத்தை திருத்துவதற்கு தேவையான தரவுகளை வழங்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கேட்டதிற்கிணங்க தேவையான தரவுகள் விரைவில் வழங்கப்படும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன கூறியுள்ளார்.
இதனடிப்படையில், அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நவம்பர் மாதம் முதலாம் திகதி வரையான காலப்பகுதிக்கு தேவையான தரவுகள் ஆணைக்குழுவிடம் வழங்கப்படும் என சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு மின்சாரக் கட்டணத்தை 32% உயர்த்துமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு ஆணையம் இதுவரை சரியான பதிலை அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறுஇருக்கையில், அடுத்த ஆண்டு மின்சார உற்பத்தி செலவை 87 சதவீதத்தால் குறைக்க மின்சார சபை தயாராகி வருகிறது, அதன்படி இயற்கை எரிவாயு மூலம் மின் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தினால், மின் கட்டணத்தை குறைக்கலாம் என்பது மின்சார சபையின் எதிர்பார்ப்பு.
மின்சார சபையின் உற்பத்தித் திட்டத்தின்படி 2026 ஆம் ஆண்டுக்குள் 2500 மெகாவாட் மின்சாரத்தையும், 2030ஆம் ஆண்டுக்குள் 3000 மெகாவாட் மின்சாரத்தையும் பெறுவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு மின்சக்தி அமைச்சிடம் வழங்கப்பட்டுள்ளன.
மின்சார சபையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் பிரகாரம், தேவைப்படும் ஊழியர்களின் எண்ணிக்கை குறித்த அறிக்கையும் எதிர்காலத்தில் அமைச்சுக்கு வழங்கப்பட உள்ளது.எனினும் தற்போது மின்சார சபையில் சுமார் இருபத்து மூவாயிரத்து ஐந்நூறு பணியாளர்கள் பணிபுரிவதுடன், ஏழு மில்லியன் பாவனையாளர்கள் மின்சார சபையின் கீழ் மின்சாரம் வழங்கப்படுகின்றனர்.