அரச பொறிமுறையில் இடம்பெறும் முறைகேடுகளைத் தடுக்க அனைத்துத் துறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டுமென வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கம் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு தெரிவித்துள்ளது
எனினும் குறித்த குழுவுக்கும் சிவில் அமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச சேவையில் பொறுப்பேற்றல் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், அதனால் அரச சொத்துக்கள் பாரியளவு விரயமாவதாகவும் சிவில் அமைப்புப் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அதேநேரம், தேர்தல் முறைமை தொடர்பிலும் குறித்த குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை, விசேட தேவையுடையவர்களுக்கு வாக்களிக்கும் வகையில் 10 மாவட்டங்களில் புதிய அடையாள அட்டை வழங்கும் முன்னோடி வேலைத்திடடம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, விசேட தேவையுடையவர்களுக்கான வசதிகளை செய்துகொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் இந்த அடையாள அட்டை வேலைத்திட்டத்தை முழு இலங்கையிலும் வழங்குவதன் இயலுமை தொடர்பில் கண்டறியுமாறும் வெளிப்படையான மற்றும் பொறுப்புக் கூறவேண்டிய அரசாங்கம் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.