கடந்த சனிக்கிழமை ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட கோர நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,400 ஆக அதிகரித்து இருக்கிறது.
கடந்த சனிக்கிழமை பிற்பகல் ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியான ஹெராட் என்ற பகுதியிலில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி இருந்தது. எனினும் அதன் தொடர்ச்சியாக 5 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் அங்கு ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் அந்த நிலநடுக்கங்கள் 4.6 முதல் 6.3 வரை பதிவாகி உள்ளன. இந்த நிலையில் நிலநடுக்கம் காரணமாக ஏராளமான கட்டிடங்கள் அங்கு இடிந்து தரைமட்டமாகின.
ஏராளமான பொதுமக்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார்கள். உயிருக்கு அஞ்சி வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். ஆப்கானிஸ்தானை அதிர வைத்த இந்த நிலநடுக்கத்தில் சிக்கியவர்களின் உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன.மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதில் தொடர்ந்து சிரமங்கள் இருந்து வருகின்றன. 3 நாட்களாக நடைபெற்று வரும் மீட்புப் பணியில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,400-ஐ தாண்டி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயமடைந்து உள்ளதாகவும், மீட்கப்பட்டவர்களில் பலர் உயிருக்கு போராடி வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக ஆப்கானிஸ்தானின் பேரிடர் மீட்புத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாக ஜன்னன் சயீக் தெரிவிக்கையில், "இதுவரை 2,445 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். 9,240 பேர் இதில் காயமடைந்து உள்ளார்கள். இந்த நிலநடுக்கம் காரணமாக 1,320 வீடுகள் சேதமடைந்தும், இடிந்தும் இருக்கின்றன." என்று தெரிவித்து உள்ளார்.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி ஈரான் நாட்டின் எல்லையோரத்தில் அமைந்து உள்ளது. அப்பகுதியில் 10 க்கும் மேற்பட்ட மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நிலநடுக்கம் ஏற்பட்ட ஹெராத் பகுதி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், 200 க்கும் மேற்பட்ட சடலங்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என தெரிவித்து இருக்கிறார். அத்தோடு நிலநடுக்கத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க சிறப்பு மருத்துவ முகாம்களும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.