உண்மையான தகவல்களை அறிந்துகொள்ளும் பிரஜைகளின் உரிமையை உறுதிப்படுத்தி, இலங்கையை உலகின் தலைசிறந்த நிலைக்கு உயர்த்த தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன கூறியுள்ளார்.
அத்தோடு சகலருக்கும் சமூக ஊடக சுதந்திரம் இருந்தாலும், பிறரை அவமதிக்கும் அல்லது பழிவாங்கும் எண்ணத்தில் அதனை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் விதிகள் கொண்டுவரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இணையத்தளத்தின் ஊடாக அவதூறான மற்றும் போலியான தகவல்களை வழங்குபவர்கள் நீதித்துறை மூலமே தண்டிக்கப்படுவார்கள்.
இதேவேளை அவ்வாறானவர்களுக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கு வழங்கப்படமாட்டாது.
சிங்கப்பூரின் தகவல் தொடர்பாடல் ஊடக மேம்பாட்டு அதிகார சபைச் சட்டம் அந்த நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது.
அதனைப் போன்று இலங்கையிலும் இணையவழி பாதுகாப்பிற்காக புதிய சட்டம் கொண்டுவரப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.