தங்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேல் கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. இவ்வாறுஇருக்கையில், ஹமாஸ் அமைப்பின் நிதியமைச்சர் ஜாவத் அபு ஷாமாலா விமான தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் நடுவில் உள்ள பகுதிதான் காசா. எனினும் இதை இஸ்ரேல் கைப்பற்ற முயன்று வருகிறது. ஆனால், பாலஸ்தீனத்தின் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பு இங்கு சுயாட்சியை நடத்தி வருகிறது. இதை இஸ்ரேல் தீவிரவாத அமைப்பாக முத்திரை குத்தியிருக்கிறது. எனவே கடந்த காலங்களில் இதற்கு எதிரான தாக்குதல்களை தீவிரமாக நடத்தியிருக்கிறது.
ஹமாஸ் அமைப்பு மட்டுமல்லாது பாலஸ்தீனத்தில் தோன்றிய பல்வேறு ஆயுத இயக்கங்கள் மீது இஸ்ரேல், மேற்கு நாடுகளின் உதவியுடன் ஏகப்பட்ட தாக்குதல்களை தொடுத்திருக்கிறது. ஆனால் ஹமாஸை மட்டும் இன்னும் இஸ்ரேலால் முழுமையாக அழிக்க முடியவில்லை.
இந்த பின்னணியில்தான் நேற்று முன்தினம் காலை ஹமாஸ், பழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஒரே நேரத்தில் சுமார் 5000க்கும் அதிகமான ஏவுகணைகள் இஸ்ரேலை தாக்கியதால் அந்நாடு தற்போது நிலைகுலைந்திருக்கிறது.
அது மட்டுமல்லாது இந்த தாக்குதலின் போது எழுந்த கரும்புகையை பயன்படுத்திக்கொண்டு ஹமாஸ் படையினர் பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் நுழைந்திருக்கின்றனர். மற்றொருபுறம் இஸ்ரேலின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு ஜீப் மூலம் ஊடுருவியுள்ளார்கள்.
இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் படையினர் இதற்கு முன்னர் கூட சண்டையில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால், இந்த மோதல் வரலாற்றில் நேற்று முன்தினம் நடந்த அளவுக்கு மிக வீரியமான தாக்குதலை ஹமாஸ் இதற்கு முன்னர் நடத்தியதில்லை. எனவேதான் தற்போது இந்த விவகாரம் உலக நாடுகளிடையே பேசு பொருளாகியுள்ளது.
எனினும் தற்போது வரை இஸ்ரேலில் 900க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். அதுபோல 2,500க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலின் பாதுகாப்பு படையினர் ஹமாஸ் அமைப்பினர் மீது சரமாரியாக வெடி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.