ஜனாதிபதி வழங்கும் வாக்குறுதிகளை, நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பில், அவரிடமே வினவவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
75வது சுதந்திர தினத்திற்கு முன்னர் அரசியல் தீர்வு, மலையக மக்களுக்கான காணி பிரச்சினைக்கான தீர்வு, ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக, சர்வதேச காவல்துறையின் ஒத்துழைப்பை பெறல், பெருந்தோட்டங்களில் உள்ள பயிரிடப்படாத தரிசு நிலங்களை தோட்டத்தில் வாழ்பவர்களுக்கே பகிர்ந்தளிப்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை ஜனாதிபதி வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இறுதியாக மட்டக்களப்பு - மயிலத்தமடு – மாதவனை கால்நடை மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பில், அதிகாரிகளை அழைத்து ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தார்.
குறித்த வாக்குறுதிகளில் எவையும் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சீனாவில் இருந்து நாடு திரும்பியதும் அவரை சந்திக்க எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை குறித்து நாடாளுமன்றில் அனைவரது முன்னிலையிலும் கேள்வி எழுப்பி, அவரை அசௌகரியத்திற்குள்ளாக்காது, தனிப்பட்ட ரீதியாக குறித்த சந்திப்பின் போது, வினவவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதற்குரிய காரணம் குறித்து, ஜனாதிபதி நிச்சயமாக விளக்கமளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் குறிப்பிட்டார்.