கடந்த 2019 இறுதியில் முதலில் சீனாவில் பரவிய கொரோனா பாதிப்பு, அதன் பிறகு உலகெங்கும் பெருந்தொற்றாக மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், கொரோனா வேகன்சின் உள்ளிட்ட பணிகளால் கொரோனா பாதிப்பு இப்போது தான் கட்டுக்குள் வந்துள்ளது. இதற்கிடையே சீனாவில் இப்போது மீண்டும் ஒரு பகீர் பாதிப்பு பரவ தொடங்கியுள்ளது.
எனினும் அங்கு திடீரென ஒரு வித மர்மக் காய்ச்சல் போன்ற பாதிப்பு குழந்தைகளிடம் அதிகம் பரவும் நிலையில், இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு சீனாவிடம் கூடுதல் தகவல்களைக் கோரியுள்ளது. சீனாவில் இப்போது மூச்சுத் திணறல் அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த நவ. 12ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணையத்தின் அதிகாரிகள், சீனா முழுவதும் சுவாச பாதிப்பு அதிகரித்துள்ளது உண்மைதான் என்றனர். இருப்பினும், கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதே இதற்குக் காரணம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
அத்தோடு இன்ஃப்ளூயன்ஸா, சார்ஸ், RSV, மைக்கோப்ளாஸ்மா நிமோனியா ஆகியவை இந்த பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என ஆய்வாளர்கள் அஞ்சுகிறார்கள். இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
குழந்தைகளிடையே பரவும் இந்த திடீர் நிமோனியா பாதிப்பு குறித்து சர்வதேச நோய் கண்காணிப்பு அமைப்பான ப்ரோமெட் அமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா பரவுவதற்கு முன்பும் சரியாக 2019 டிசம்பரில் இந்த அமைப்பு புது நோய்ப் பாதிப்பு குறித்து எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பெய்ஜிங் மற்றும் லியோனிங் என்ற பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிகளவில் அனுமதிக்கப்படுவதாகச் சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன. இந்த இரு நகரங்களுக்கும் இடையே 800 கிமீர தொலைவு இருக்கிறது. இதன் மூலம் இந்த நிமோனியா பாதிப்பு ஓரிடத்தில் மட்டும் ஏற்படவில்லை. அவை பரவ தொடங்கிவிட்டது என்பது தெரிய வருகிறது.
நவீன மருத்துவம் மட்டுமின்றி பாரம்பரிய சீன மருத்துவத்தைத் தேடியும் அங்குள்ள பொதுமக்கள் குவியத் தொடங்கியுள்ளனர். அங்கேயும் சுவாச பிரச்சினை தான் முக்கியமானதாக இருக்கிறது. இருப்பினும், அதிகளவில் நோயாளிகள் இருப்பதால் அவர்கள் சுமார் 2 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய இருப்பதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.
அத்தோடு, பள்ளிகளில் இந்த பாதிப்பு ஏற்படும் நிலையில், இதனால் ஆசிரியர்கள் மற்றும் இதர பள்ளி ஊழியர்களும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் அங்குள்ள பல பள்ளிகளும் மூடப்பட்டுள்ளது. நிலைமை இப்படியே தொடரும் நிலையில் பள்ளிகள் மீண்டும் எப்போது தொடங்கப்படும் எனத் தெரியவில்லை.
அங்கே பல இடங்களில் என்ன காரணம் என்றே தெரியாமல் பலருக்கும் சுவாச பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிக மாணவர்கள் இந்த நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அங்கே உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழியும் வீடியோவும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
மேலும் இந்த மூச்சுத் திணறல் பாதிப்பு சீனாவில் இப்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதை அங்குள்ள செய்தி நிறுவனங்களே சுட்டிக் காட்டுகின்றன. பல நோய்க்கிருமிகள் இணைந்து இந்த பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்று அஞ்சப்படுகிறது. இருப்பினும், துல்லியமான தகவல்கள் இருந்தால் மட்டுமே இது பிரச்சினைக்குரிய நோய்க்கிருமி ஒன்றா இல்லை கொரோனா லாக்டவுன் இல்லாமல் வந்த முதல் குளிர்காலம் என்பதால் ஏற்பட்ட பாதிப்பா என்பது தெரிய வரும்.