இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே யுத்தம் தொடர்ந்து வரும் நிலையில், இரு தரப்பிற்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட உள்ளதாகப் பரபர தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த அக். 8ஆம் தேதி தொடங்கிய மோதல் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. முதலில் இஸ்ரேல் நாட்டில் உள்ளே இறங்கிய ஹமாஸ் படை மிக மோசமான தாக்குதலை நடத்திய நிலையில், அதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தது.
காசா பகுதிகளில் ஏவுகணை தாக்குதல்களை நடத்திய இஸ்ரேல் அதன் பிறகு உள்ளே இறங்கி சரமாரியான தாக்குதல்களை நடத்தியது. தீவிரமாகத் தாக்குதல் நடத்தி வந்ததால் அங்கே ஒரு மாதத்திற்கு மேலாகச் சண்டை தொடர்ந்தது.
அத்தோடு அதிலும் குறிப்பாகக் கடந்த சில காலமாக காசாவில் உள்ள மருத்துவமனைகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளும் கூட கண்டனம் தெரிவித்துள்ளன. மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தக் கூடாது என்று தெரிவித்த அமெரிக்கா, உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும் என்றும் வலியுறுத்தின. அனைத்து உலக நாடுகளும் மருத்துவமனைகள் மீதான தாக்குதல்களைக் கண்டித்தன.
அதேநேரம் இஸ்ரேல் இதையெல்லாம் கேட்பதாக இல்லை. அவர்கள் தொடர்ந்து தங்கள் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தின. காசா பகுதியில் இருக்கும் மருத்துவமனைகளுக்குக் கீழ் இருக்கும் சுரங்கங்களை ஹமாஸ் சுரங்கப் பாதைகளின் மையங்களாகப் பயன்படுத்துவதாகவும் அங்கே பிணையக் கைதிகளை வைத்திருப்பதாகவும் இஸ்ரேல் பரபர கருத்துகளைக் கூறியுள்ளது. இது தொடர்பான வீடியோக்களையும் இஸ்ரேல் ஆதாரமாக வெளியிட்டு வருகிறது.
மேலும் இந்தத் தாக்குதல் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடரும் நிலையில், பல்வேறு தரப்பினரும் போர் நிறுத்தம் தேவை என்று வலியுறுத்தினர். இருப்பினும், இதுவரை இஸ்ரேல் போர் நிறுத்ததிற்கு ஒப்புக் கொள்ளவில்லை. தங்கள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலை முழுமையாக அழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என்றே இஸ்ரேல் தொடர்ச்சியாகச் சொல்லி வருகிறது. அதேநேரம் கத்தார் மத்தியஸ்தம் செய்யப் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை ஒரு பக்கம் தீவிரமாக நடந்து வருகிறது.
இதற்கிடையே ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். தனது இயக்கம் இஸ்ரேலுடன் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் நெருங்கிவிட்டதாகவும் விரைவில் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டெலிகிராம் தளத்தில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு நெருங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் ஒரு மாதத்திற்கும் மேலாகத் தொடர்ந்து வரும் நிலையில், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கூறியுள்ள இந்தக் கருத்துகள் மிகவும் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. அதாவது இஸ்ரேல் ஹமாஸ் இடையே 5 நாட்கள் போர் நிறுத்தம் ஏற்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. காசா பகுதிகளில் ஐந்து நாட்களுக்கு இஸ்ரேல் தாக்குதல் நடத்தாது..
எனினும் அதற்குப் பதிலாக 50 மற்றும் 100 என இரு பேட்ச்களாக பிணையக் கைதிகளை விடுவிப்பார்கள். அதில் இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இருப்பார்கள். அதேநேரம் ராணுவ வீரர் யாரையும் விடுவிக்க முடியாது என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது. கடந்த அக். மாதம் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 இஸ்ரேல் நாட்டினர் கொல்லப்பட்ட நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 240 பேரை ஹமாஸ் பிணையக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.