4 வாள்களுடன் வன்முறையிலும் போதைப்பொருள் கடத்தலிலும் ஈடுபட்ட சந்தேக நபர்கள் குழு ஒன்றை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது 4 வாள்களுடன் 8 சந்தேக நபர்களும், 3 பெண் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 23 மற்றும் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் மற்றும் 26, 46 மற்றும் 47 வயதுடைய பெண் சந்தேக நபர்கள் களனி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பேலியகொட பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு மேற்படி குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இவர்களில் 7 பேர் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் என பேலியகொட பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் குறித்த சந்தேக நபர்கள் வெளிநாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் வழிகாட்டுதலின் கீழ் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.