இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஒரு மாதத்திற்கு மேலாகப் போர் தொடரும் நிலையில், இந்த போரின் முடிவு என்னவாக இருக்கும், சண்டைக்குப் பிறகு காசாவில் யார் ஆட்சியை அமைப்பார் என்பது குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடக்கும் போர் என்பது ஒரு மாதத்திற்கு மேலாகத் நகர்ந்து கொண்டு இருக்கின்றது. இந்த யுத்தத்தில் முதலில் ஹமாஸ் கை ஓங்கி இருப்பது போலத் தெரிந்தாலும் கூட சில நாட்களில் நிலைமை தலைகீழாக மாறியது.
இப்போது காசா மீது இஸ்ரேல் தான் சரமாரியாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. விரைவில் முழு வீச்சிலான படையெடுப்பையும் இஸ்ரேல் நடத்தும் என்றே சொல்லப்படுகின்றது. இதற்கிடையே இந்த ராணுவத் தாக்குதல் முடிவடையும் போது காசாவை ஆட்சி செய்வது யார் என்ற கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. இது குறித்து நாம் பார்க்கலாம்.
பாலஸ்தீன ஆதரவு குழுக்களில் உள்ள ஆயுதம் ஏந்திய குழுதான் ஹமாஸ். சுமார் 24 லட்சம் மக்களைக் கொண்ட காசா பகுதியைக் கடந்த 2007ஆம் ஆண்டு இந்த ஹமாஸ் படை தான் நிர்வகித்து வருகிறது..அத்தோடு ஹமாஸ் அங்கே ஆட்சிக்கு வந்த பிறகே, காசாவை சுற்றி இஸ்ரேல் தனது கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அங்கே கடும் மோதலுக்கு பிறகே ஹமாஸ் அதிகாரத்தைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
அப்போது காசா மற்றும் மேற்கு கரை நிர்வகிக்க பாலஸ்தீனிய அதிகார சபை என்ற அமைப்பு இருந்தது. அந்த அமைப்புடன் நடந்த மோதலை தொடர்ந்தே ஹமாஸ் காசா பகுதி முழுக்க தன்வசம் கொண்டு வந்தது. அப்போது முதல்தான் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் தீவிரமானது. காசா மீது கடும் கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டன.
எனினும் சமீபத்தில் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்ற அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனும் கூட காசா பகுதியின் கட்டுப்பாடு என்பது ஹமாஸிடம் இருந்து பாலஸ்தீன அதிகார சபைக்குத் தரப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் அந்த அமைப்பு அதிகாரத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்று ஆண்டனி பிளிங்கன் தெரிவித்தார்.
தற்போது மேற்குக் கரையில் குறிப்பிட்ட பகுதிகளைப் பாலஸ்தீன அதிகார சபையே நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு "விரிவான அரசியல் தீர்வு" காணப்பட்டால் மட்டுமே காசாவில் பாலஸ்தீன அதிகார சபையால் அதிகாரத்திற்கு வர முடியும் என்று பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்தார்.
இருப்பினும் 88 வயதான பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாசுக்கு மக்களிடையே ஆதரவு பெரிதாக இல்லை. மேற்கு கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் பகுதியில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு அதிகரிக்கும் நிலையில், அதைப் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸால் கட்டுப்படுத்த முடிவதில்லை.
மறுபுறம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தங்களுக்குக் காசா பகுதியை ஆக்கிரமிக்கும் எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளார். அத்தோடு தங்கள் சண்டை ஹமாஸுடன் தானே தவிர பாலஸ்தீன மக்களுடன் இல்லை என்று குறிப்பிட்ட அவர், காசாவை ஆக்கிரமிப்பது அல்லது ஆட்சி செய்ய தங்களுக்குத் திட்டம் இல்லை என்றார். மேலும், காசாவில் மக்களாட்சி முறையில் ஒரு அரசு அமைக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம் இதை ஏற்க மறுக்கும் லெபனானில் உள்ள ஹமாஸ் தலைவர் ஒசாமா ஹம்தான், காசா பகுதியில் ஒரு பொம்மை அரசை ஹமாஸ் ஒருபோதும் ஏற்காது என்றும் தொடர்ந்து காசாவில் ஹமாஸ் இருக்கும் என்றும் தெரிவித்தார். அமெரிக்கா போடும் இதுபோன்ற திட்டங்களை ஹமாஸ் ஒருபோதும் நம்பாது என்றும் அவர் தெரிவித்தார். இந்த ஹமாஸை தான் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.
இப்படி எல்லா பக்கமும் குழப்பமான சூழல் நிலவி வருகிறது. இதனால் இஸ்ரேல் ஹமாஸ் போர் முடிந்த பிறகு, காசாவில் என்ன நடக்கும் என்பதில் குழப்பமே நிலவி வருகிறது. ஆனால், தற்போது இருக்கும் ஆப்ஷன் இந்த மூன்றும் தான். இவர்களில் யாராவது ஒருவர் கட்டுப்பாட்டில் தான் காசா பகுதி வரும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.