சீனாவில் கடந்த சில காலமாக நிமோனியா பாதிப்பு அதிகரித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், அதற்கான காரணம்.. அதன் அறிகுறிகள் என்ன என்பவை குறித்து நாம் பார்க்கலாம்.
சீனாவில் சமீபத்தில் நிமோனியா பாதிப்பு திடீரென அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனா பெருந்தொற்று உலகெங்கும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், இப்போது தான் உலகம் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது.
இந்த நேரத்தில் இப்படி திடீரென நிமோனியா பாதிப்பு பரவுவது அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீன தலைநகர் பெய்ஜிங் மற்றும் லியோனிங் ஆகிய இரு பகுதிகளிலும் தான் நிமோனியா பாதிப்பு மோசமாக இருக்கிறது.
எனினும் அதேநேரம் திடீரென அங்கே இந்தளவுக்கு வைரஸ் பாதிப்பு அதிகரிக்க என்ன காரணம் என்று தெரியவில்லை. அங்கே புதுவித நோய்க் கிருமிகள் பரவியதற்கான ஆதாரமும் எதுவும் இல்லை என்று அந்நாட்டு மருத்துவர்கள் உலக சுகாதார அமைப்பிடம் தெரிவித்துள்ளனர். இருப்பினும், குழந்தைகள் மத்தியில் இந்த நிமோனியா பாதிப்பு அதிகரித்துள்ளது அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிப்பு அங்கே அதிகமாக இருப்பதால் சில பள்ளிகளில் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பும் கூட இந்த நிலையைக் கண்காணித்தே வருவதாகத் தெரிவித்துள்ளது. அத்தோடு , மத்திய அரசும் இது தொடர்பாக விளக்கமளித்திருந்தது. அதாவது சீனாவில் ஏற்பட்டுள்ள நிமோனியா பாதிப்பு ஒரு குறிப்பிட்ட வைரஸ் கிருமியால் ஏற்பட்டது இல்லை என்றும் அது பல வைரஸ்களின் காக்டெய்ல் காரணமாக ஏற்பட்டதாகவும் கூறியிருந்தது. அத்தோடு, சீனாவில் நிலவும் சூழலை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டிருந்தது.
திடீரென அதிகரிக்கும் நிமோனியா: மைக்கோபிளாஸ்மா நிமோனியா, ஆர்எஸ்வி, அடினோவைரஸ் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சீனாவில் திடீரென பரவி வரும் இந்த பாதிப்பின் முக்கிய அறிகுறி என்ன.. நாம் பாதுகாப்பாக இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
அறிகுறிகள்: நிமோனியா என்பது ஒரு நுரையீரல் தொற்றாகும். இது ஒரே நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு நுரையீரலையும் கூட பாதிக்கும். பாக்டீரியா, இன்ஃப்ளூயன்ஸா, ரைனோவைரஸ், கோவிட் மற்றும் மைக்கோபிளாஸ்மா நிமோனியா என்று பல காரணங்களால் நிமோனியா ஏற்படும். நிமோனியா பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தொண்டை வலி, தசை வலி, மற்றும் சோர்வு ஆகியவை முக்கிய அறிகுறிகளாக இருக்கும். மேலும்,குழந்தைகளுக்கு இருமல் மற்றும் மூச்சுத் திணறலும் ஏற்படும்.
சீனாவில் திடீரென பரவும் இந்த மர்மமான நிமோனியா பாதிப்பு காரணமாகக் கடுமையான காய்ச்சல் மற்றும் அசாதாரண மார்பு வலி ஏற்படுகிறது. அதேநேரம் இருமல் பெரியளவில் இருப்பதில்லை. திடீரென இந்த நிமோனியா பாதிப்பு அதிகரிக்க என்ன காரணம் என்பதைக் கண்டறிய ஆய்வாளர்கள் முயன்று வருகிறார்கள். ஆர்எஸ்வி, பாக்டீரியா, மைக்கோபிளாஸ்மா என ஏற்கனவே இருக்கும் நோய்க் கிருமிகளே இதை ஏற்படுத்தி இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
அத்தோடு குளிர்காலத்தில் பொதுவாக இதுபோன்ற சுவாச நோய்ப் பாதிப்பு அதிகமாகவே இருக்கும். அப்போது இந்த பாதிப்புகளைத் தடுக்க மாஸ்க் அணியலாம். மேலும், உடல்நிலை பாதிக்கப்பட்டால் வெளியே சென்று அதை மற்றவர்களுக்குப் பரப்பாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும்.
அடிக்கடி சோப் போட்டு கை கழுவுவது எப்போதும் நோய்க் கிருமிகளை நம்மிடம் இருந்து தள்ளியே வைத்திருக்கும். அதேநேரம் தற்போதுள்ள சூழலில் பயணக் கட்டுப்பாடுகள் எதுவும் தேவையில்லை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.