பொருளாதார நெருக்கடிக்கு முன்னரான காலப்பகுதியில் நான்கு பேர் உள்ள ஒரு குடும்பத்தின் மாத செலவு 85 ஆயிரம் ரூபாவாக காணப்பட்டது. ஆனால் தற்போது அந்த தொகை 1 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாவாக உயர்வடைந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது இறுதி வரவு செலவுத் திட்ட உரையை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். நான் குறிப்பிட்ட விடயங்களை சுட்டிக்காட்டி அவர் உரையாற்றியதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். நாடு தற்போது சற்று ஸ்திரநிலையடைந்துள்ளது என்று ஜனாதிபதி குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்கிறேன்.
இலங்கையில் தற்போது எரிபொருள், எரிவாயுவுக்கான வரிசை இல்லை. ஆனால் மக்களின் வாழ்க்கை தரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு முன்னரான காலப்பகுதியில் நான்கு பேர் உள்ள ஒரு குடும்பத்தின் மாத செலவு 85 ஆயிரம் ரூபாவாக காணப்பட்டது.
சத்திரசிகிச்சை வெற்றி ஆனால் நோயாளி மரணம் என்பதற்கு அமைவாகவே ஜனாதிபதியின் செயற்பாடுகள் காணப்படுகின்றன.
விவசாயத்துறையின் வீழ்ச்சியை தொடர்ந்து நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டது. விவசாயத்துறையை மேம்படுத்த எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. வற் வரியில் உழவு இயந்திரம் முதல் மண்வெட்டி வரையிலான சகல பொருட்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. வரி அதிகரிப்பதை மாத்திரம் அரசாங்கம் பிரதான பொருளாதார கொள்கையாக கொண்டுள்ளது.
2048 ஆம் ஆண்டு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைவதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். அவ்வாறாயின் பொருளாதார வளர்ச்சி வருடாந்தம் 07 சதவீதத்தால் உயர்வடைய வேண்டும்.
ஆனால் அடுத்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி 1.8 சதவீதத்தாலும்,2025 ஆம் ஆண்டு 2.7 சதவீதத்தாலும், 2026 ஆம் ஆண்டு 3 சதவீதத்தாலும், 2027 ஆம் ஆண்டு 3.1 சதவீதத்தாலும் அதிகரிக்க கூடும் என அரசாங்கம் குறிப்பிடுகிறார்.
இவ்வாறான நிலையில் 2048 ஆம் ஆண்டு பொருளாதார முன்னேற்றம் என்பது சாத்தியமற்றது. அத்துடன் கண்கட்டி வித்தையால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது என தெரிவித்துள்ளார்.