தற்பொழுது இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மன தைரியம் அற்றவராகவே இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் சாடியுள்ளார்.
நேற்று (09) அவர் கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் ஏற்படு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் மீன் பிடியில் ஈடுபடுவார்கள் என தெரிவித்ததுடன், அதற்காக இந்தியாவினால் இலங்கை மீனவர்களுக்கு பணம் வழங்குவது தொடர்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மேனனுடன் கலந்துரையாடியதாகவும் அண்மையில் தெரிவித்துள்ளார்.
இந்தியா வழங்குகின்ற ஒரு ரூபாய் இரண்டு ரூபாயை பெற்றுக் கொண்டு, வீடுகளிலேயே இருங்கள் என்று சொல்லக்கூடிய அமைச்சர்களால் எப்படி இந்த நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும்?
இலங்கை கடற்பரப்பில் இலங்கை மீனவர்கள் மாத்திரமே மீன்பிடிக்க முடியும் எனவும், அவர்களுக்கு தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் தெரிவித்திருந்தால் ஏற்கக் கூடியது.
இலங்கையில் வெளியுறவு அமச்சரிடம் அப்படி கூறமுடியாத நிலையில் உள்ளார். காரணம் தமது பதவிகளையும் தமது கதிரைகளையும் இருப்புக்களையும் தக்க வைத்துக் கொள்வதற்காகவே இப்படியான கதைகளை சொல்லி வருகிறார்கள் எனவும் சாடியுள்ளார்.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் இந்தியாவின் செட்டைக்குள் உருவாக்கப்பட்ட நாங்கள், எங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என நம்பியிருக்கும் மக்களுக்கு எமது கடல் பரப்பில் கடற்தொழிலில் ஈடுபடும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை இழக்க விட முடியாது.
அவ்வாறு இழந்து நிற்கும் எமக்கு துரோகம் செய்யாதீர்கள் என இந்தியாவில் இருக்கும் எமது மீனவர்களை வேண்டுகிறோம். இந்திய இலங்கை மீனவர்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்தும் நோக்கிலே அவர் செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.