வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அநுராதபுர பொதுச் சந்தையில் ஒரு கிலோ கரட் 2000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று மலையக மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மரக்கறிகளின் விலை உயர்வால் அநுராதபுரம் ,நுவரெலியா ,தம்புள்ளை பொதுச் சந்தைக்கு வந்த பெருந்தொகையான நுகர்வோர் மரக்கறிகளை கொள்வனவு செய்வதை தவிர்த்துள்ளனர்.
ஏனைய நாட்களில் அநுராதபுரம் ,நுவரெலியா தம்புள்ளை பொதுச் சந்தைக்கு அதிகளவான நுகர்வோர்கள் வருகை தந்திருந்த நிலையில் தற்போது வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர்கள் சந்தைக்கு வருவதில் பெரும் வீழ்ச்சி காணப்பட்டது.
தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கரட் மொத்த விலை 1500 ரூபாவாகவும் சில்லறை விலை 1700 ரூபாவாகவும் இன்று (16) மேற்கொள்ளப்பட்ட வினவுதலில் தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் சுனில் செனவிரத்ன தெரிவித்தார்.
ஒரு கிலோ போஞ்சியின் மொத்த விலை 1,000 ரூபாவாகவும் சில்லறை விலை 1,400 ரூபாவாகவும் உள்ளது.
ஒரு கிலோ பச்சை மிளகாயின் மொத்த விலை 1,000 ரூபாவாகவும், சில்லறை விலை 1,300 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.