மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முள்ளிக்குளம் கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படை சிப்பாய் ஒருவர் வியாழக்கிழமை (4) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடற்படை முகாமிற்கு வெளியில் உள்ள காட்டுப் பகுதியில் உள்ள மரம் ஒன்றில் இருந்தே கடற்படை சிப்பாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட கடற்படைச் சிப்பாய் 33 வயது உடையவர் எனவும் மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரிய வந்துள்ளது.
முள்ளிக்குளம் கடைப்படை முகாமில் உள்ள கடற்படையினரின் விடுதியில் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் குறித்த கடற்படை சிப்பாய் வாழ்ந்து வந்துள்ளார்.
குறித்த கடற்படை சிப்பாய் கடந்த செவ்வாய்க்கிழமை(02) மதியம் குறித்த கடற்படை முகாமில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியில் சென்ற நிலையில் அவர் மீண்டும் முகாமிற்கு திரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தனது கணவர் காணாமல் போனமை குறித்து அவரது மனைவி சிலாபத்துறை பொலிஸ் நிலையத்தில் புதன்கிழமை (3) முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையிலே வியாழக்கிழமை (4) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் சிலாபத்துறை பொலிஸார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.