தெரிவு செய்யப்பட்ட தனஞ்சயன் வெளியேற்றம்...!

tubetamil
0

 எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியை பிரதிநிதித்துவப் படுத்தி  வன்னி மாவட்டத்தில்  போட்டியிட இருந்த சட்டத்தரணி தனஞ்சன்  தற்போது தான் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடுவது சரியான தீர்மானம் அல்ல என பல அறிவுறுத்தல்கள் தனக்கு கிடைக்கப்பெற்ற நிலையில் இந்த போட்டியிட வேண்டாம் என்ற முடிவினை எடுத்துள்ளதாக சட்டத்தரணி தனஞ்சயன் தனது முகநூல் பக்கத்தின் ஊடாக தெரியப்படுத்தியுள்ளார்.

குறித்த முகநூல் பதிவில்,

தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட தனஞ்சயன் வெளியேற்றம்! பலர் வெளியேற தீர்மானம் | Sri Lanka General Election 2024

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிடுமாறு பல்வேறு கட்சிகளாலும் சுயேட்சைக்குழுக்களாலும் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த அடிப்படையில் தமிழ் மக்களினுடைய பாரம்பரிய கட்சிகளில் ஒன்றான கட்சி, இலங்கை தமிழரசுக்கட்சி என்ற அடிப்படையில் தமிழரசுக்கட்சியின் ஊடாக வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்கு தீர்மானித்திருந்தேன்.

ஆயினும் நான், தமிழரசுக்கட்சியில் போட்டியிடுவது தொடர்பாக என்னுடைய நண்பர்களுடனும் நலன்விரும்பிகளுடனும் கலந்துரையாடியபோது, பலர் தற்போதைய சூழ்நிலையில் இலங்கைத் தமிழரசுக்கட்சியில் போட்டியிடவேண்டாம் என ஆலோசனை வழங்கியிருந்தனர் என்பதுடன் நான், தமிழரசுக்கட்சியில் போட்டியிடுவதானது உண்மையான தமிழ்த் தேசியத்தை பலவீனப்படுத்தும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

இருந்த போதிலும் என்னுடைய நலன்விரும்பிகளின் விமர்சனங்களையும் மீறி, தமிழரசுக்கட்சி ஊடாக போட்டியிடுவது என்று தீர்மானித்திருந்தேன்.


கடந்த காலங்களில் அந்தக் கட்சி எம்மவர்களால் அடையாளப்படுத்தப்பட்டு மக்கள் மத்தியிலும் சர்வதேச அரங்கிற்கும் கொண்டு செல்லப்பட்ட கட்சியாகும். அந்த அடையாளத்தை நாங்கள் பிரதிபலிக்கவேண்டும் என்பதே என்னுடைய நோக்கமாக இருந்தது.

ஆனாலும், கடந்த சில நாட்களாக கட்சி சார்ந்து நடைபெறுகின்ற சங்கடம் தருகின்ற விடயங்கள் அந்தக் கட்சி ஊடாக பயணிப்பதன் ஊடாக எங்கள் மக்கள் சார்ந்து எதிர்காலத்தில் பணியாற்ற முடியுமோ? என்ற கேள்வியை எனக்குள் எழுப்பியுள்ளது.

நான் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாவிட்டாலும், மக்கள் சார்ந்த பணியில் முடிந்த அளவிற்கு கடந்தகாலங்களில் பணியாற்றியிருக்கிறேன். தொடர்ந்தும் பணியாற்றுவேன். என்னுடைய மக்கள் சார்ந்த பணிக்கு உங்கள் ஒத்துழைப்புக்களை தொடர்ந்தும் வழங்குவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை,  தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் சார்புடையவர்கள் என இன்றையதினம் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார். 

அத்துடன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவர் பதவி உள்ளிட்ட அனைத்துப் பதவிகள் மற்றும் பொறுப்புக்களில் இருந்து தவராசா நேற்றையதினம் விலகினார். 

இதன் தொடர்ச்சியாக கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும் கட்சியின் அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும்  இன்றையதினம் விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

அத்துடன், மேலும் பலர் வெளியேறுவதற்கு ஆலோசித்து வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top